Friday, June 22, 2007

இறைவா! எங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். "அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி) விடுவான்" என்று நீர் கூறுவீராக.

20:106. "பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான்.

20:107. "அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்".

20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் - எக்காளம் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ்வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்க மாட்டீர்.

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் (அருளாளன்) எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்துக் கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.

20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.

20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்து விடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்துக் கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.

20:112. எவர் முஃமினாக (நம்பிக்கை கொண்டவராக) இருந்து, ஸாலிஹான - நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார்.

20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ - செய்தி அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப் படாதீர்; 'இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!' என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!.
அல் குர்ஆன்: சூரா தாஹா.