Friday, June 08, 2007

அல்லாஹ்விடம் எனக்காக இன்னொருவர் பரிந்து பேசுவது பலனளிக்குமா?

2:48. "நீங்கள் மறுமை நாளை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்! அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்குப் பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாக) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்".

2:123. "எந்த நாளில் ஒரு ஆத்மா மற்றவொரு ஆத்மாவுக்கு எந்தப் பலனையும் அளிக்காதோ அந்நாளைப் பயந்துக் கொள்ளுங்கள். அந்த ஆத்மாவிடமிருந்து எந்தவொரு பரிகாரமும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. அதற்காக எவர் பரிந்துரைத்தாலும் பலனில்லை. அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்".

40:18. "அநீதி செய்பவர்களுக்கு உதவியாளர்கள் அந்நாளில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அனுமதி பெற்ற சிபாரிசுகாரர்களும் இருக்கமாட்டார்கள்".

74:48. "அவர்களுக்காகப் பரிந்து பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது"

70:40-48. சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்' என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்காகப் பரிந்துரை பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது"

2:255. "அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவனிடத்தில் எவருக்காக யாரால்தான் பரிந்துபேச முடியும்...?"

53:26. "வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். அவர்கள் (எவருக்காகவும்) ஷபாஅத்துச் செய்தாலும் அது எந்தப் பயனும் அளிக்காது. ஆனால் அல்லாஹ் தான் விரும்பி திருப்திப்பட்டு எவருக்கு ஷபாஅத்துக்கு அனுமதி கொடுக்கின்றானோ (அத்தகையவர் பரிந்துப் பேசுவது பயனளிக்கும்)."

21:28. "அவர்களுக்கு முன்பின் இருப்பவற்றை அவன் நன்றாக அறிகின்றான். அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றெவருக்கும் இந்த மலக்குகள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்கஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்"

34:23. "அல்லாஹ்வுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறெவருடைய சிபாரிசு செய்வதும் பலனளிக்காது."

10:18. "முஷ்ரிக்குகள் தமக்கு நன்மையோ தீமையோ எதுவும் செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர்".

6:51. "நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை"

32:4. "அல்லாஹ் தான் வானங்கள் பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்து பிறகு அர்ஷின் மீது ஸ்திரப்பட்டான். உங்களை இரட்சிப்பதற்கும், உங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?".

39:43-44. "இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் 'சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்".

20:109. "அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பினானோ அவர்களைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது."

36:22-23. "என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) இறைவானாகிய நான் எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது".