Friday, May 18, 2007

சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே!

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். 49:11

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும், உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேச வேண்டாம். 49:12

நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். 13:22

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள். மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், 'ஸலாம்' (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 25:63

அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: 'எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை' என்று கூறுவார்கள். 28:55

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தி உடையவர்களுக்கே மேலான முடிவு உண்டு. 28:83

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?' 41:33

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். 41:34