Wednesday, December 15, 2004

யாருடையது அழகிய சபை?

19:66. மனிதன் கேட்கிறான்: "நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா?" என்று.

19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா?

19:68. ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு (அருளாளனுக்கு) மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

19:70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்களுடைய பாவத்தால்) முதல் தகுதியுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம் இறைவனின் முடிவான தீர்மானமாகும்.

19:72. அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.

19:73. இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில் (நம்பிக்கை கொண்டவர்களிடத்தில்) (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) "நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடைய சபை மிக அழகாகவும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர்.

19:74. இன்னும், இவர்களை விட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.

19:75. "யார் வழி கேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை (தீர்ப்பு நாளை) காணும் வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலகீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்துக் கொள்வார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

19:76. "மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்."

19:77. "நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும் - தீர்ப்பு நாளிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப் படுவேன்" என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?

19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா?

19:79. அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.

19:80. இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.

19:81. (முஷ்ரிக்குகள் - இணை வைப்பவர்கள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!

19:82. அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து இவர்களுக்கு விரோதமாக மாறிவிடுவர்.

அல் குர்ஆன்: ஸூரத்து மர்யம்.